மேற்கு ஆஸ்திரேலியாவில் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட 5 பேரைக் கொலை செய்த தந்தை அவர்களது சடலங்களுடன் சில நாட்கள் வீட்டிலேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பேர்த்தில் Bedford எனும் இடத்தில் நேற்று முன்தினம் ஒரே வீட்டிலிருந்து 3 வயது பெண் குழந்தை, 2 வயது இரட்டைக் குழந்தைகள் அவர்களது 41 வயது தாய் மற்றும் 71 வயது பாட்டி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இக்கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 24 வயது Anthony Robert Harvey மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் கொலைசெய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை எனவும், தனது முழு குடும்பத்தையும் கூரிய ஆயுதம் மற்றும் கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி கொலை செய்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 3ம் திகதி மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொன்ற Harvey, அடுத்தநாள் 4ம் திகதி அங்கு வந்த தனது மாமியாரையும் கொன்றபின்னர் அந்த வீட்டிலேயே சிலநாட்கள் தங்கியிருந்துவிட்டு, நேற்று முன்தினம் பேர்த்திற்கு வடகிழக்காக 1500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள Harvey, செப்டம்பர் 19ம் திகதி இரண்டாம்கட்ட நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற 3வது பெரிய கூட்டு படுகொலை சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Lifeline 13 11 14, beyondblue 1300 22 4636
