முப்பது வருடங்களுக்கு மேலாக பூர்வகுடி மக்களின் ஊதியத்தில் சுரண்டப்பட்ட சுமார் 19 கோடி டொலர் பணத்தை அந்த சமூகத்தவர்களுக்கு மீளச்செலுத்துவதற்கு குயின்ஸ்லாந்து அரசு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது.
சுமார் பத்தாயிரம் பூர்வகுடி மக்களின் ஊதியத்தை சுரண்டியதற்கு எதிராக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சட்டப்போராட்டத்திற்கு நீண்ட காலத்தின் பிறகாவது நீதி கிடைத்துள்ளதாக இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடி வந்த 80 வயதான Hans Pearson தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 1939 ஆம் ஆண்டுக்கும் 1972 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பண்ணைகள் மற்றும் பல்வேறு இடங்களில் வேலை செய்த பூர்வகுடி மக்களின் சம்பளப்பணத்தை முழுமையாக செலுத்தாமல் சுரண்டியதற்கு எதிராக இந்தச்சட்டப்போராட்டம் இடம்பெற்றுவந்தது.
சுமார் 12 வருடங்களுக்கு மேலாக இந்த விவகாரத்தை அரசு மட்டத்துக்கு எடுத்துச்சென்று தங்களது சமூகத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோரிய பூர்வகுடி மக்களுக்கு இறுதியாக ஒரு தீர்வு கிடைத்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
தமக்கான நீதி நிலைநாட்டப்பட்டாலும் இதற்காக எடுத்துக்கொண்ட காலப்பகுதி குறித்து பூர்வகுடி சமூகம் விசனம் தெரிவித்துள்ளது.
