ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வானொலியாளர் Alan Jones. பிரியா குடும்பத்திற்கு துவக்கம் முதலே குரல் கொடுத்துவருகின்றார். ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையோடு இணைந்த பிரியா குடும்பத்தை அரசு நாடு கடத்த முற்பட்ட விதத்தை Alan Jones தனது நிகழ்ச்சியில் விமர்சித்தார். அரசு மிருகத்தனமாக நடந்துகொள்கிறது என்றும், கிறிஸ்தவ விழுமியங்களை கடைப்பிடிப்பதாக கூறும் Morrison அரசு நடந்துகொண்ட விதம் அவமானத்திற்குரியது என்றும், அரசு ஒரு அரக்கன் என்றும் மிகக் கடுமையாக விமர்சித்தார் Alan Jones.

அகதி அந்தஸ்து கோருவோர் நாடுகடத்தப்படுவதாகவும், அப்படியான அச்சத்தை அவர்கள் எதிர்கொள்வதாகவும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியானவர்களின் முகத்தை நாம் பார்த்திருக்கமாட்டோம்; அவர்களின் பெயர்கள் நமக்கு தெரியாது. வியாழக்கிழமை இரவு நாம் பார்த்த பிரியா குடும்பம் அகதி நிலை கோரும் முகம் என்று குரல் தளுதளுக்க கருத்து வெளியிட்டார் நாட்டின் பிரபலமான ஊடகவியலாளர் Waleed Aly. மேலும் பிரியா குடும்பத்தை அரசு நாட்டில் வாழ அனுமதிக்குமாறு அவர் கலந்துகொண்ட Network 10 யின் The Project எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிற ஊடகவியலாளர்களும் வலியுறுத்தினர்.

பிரியா குடும்பத்தை தொடர்ந்து இந்த நாட்டில் வாழ அனுமதியுங்கள் என்று அரசை வலியுறுத்தி Change.org இணையதளத்தில் இதுவரை சுமார் 228000 (இரண்டு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் பேர்) கையெழுத்திட்டுள்ளனர் என்றும் இந்த குடும்பம் Biloela வில் வாழ அனுமதியுங்கள் என்று ஆஸ்திரேலிய மக்கள் அரசுக்கு விடுக்கும் செய்தி என்றும் Change.org இணையதள கோரிக்கை முன்னெடுப்பு இயக்குனர் Nic Holas கூறியுள்ளார். பிரியா குடும்பத்தை நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும் என்று இவர் தொடர்ந்து கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறார்.

பிரியா குடும்பம் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சம் Biloela வில் வாழும் சமூகத்தை மிகவும் கவலையடைய வைத்துள்ளது. அந்த குடும்பத்தை இரவோடு இரவாக இலங்கைக்கு நாடுகடத்த முற்பட்ட சம்பவம் எப்படி அந்த குடும்பத்தை மண நிலை ரீதியாக பாதித்திருக்கும் என்று Biloela மக்கள் கவலையில் உள்ளனர் என்று Biloela நகர் அமைந்துள்ள Banana Shire Councilயின் மேயர் Nev Ferrierஅவர்கள் கருத்து வெளியிட்டார். பிரியா குடும்பம் தொடர்ந்து Biloela வில் வாழ அரசு அனுமதிக்க வேண்டும் என்று அவர் அரசை கேட்டுக்கொண்டார்.

“பிரியா குடும்பத்தை Biloela சமூகம் வரவேற்கிறது. இரு குழந்தைகளும் இங்கேயே பிறந்தவர்கள். உள்ளூர் பகுதிகளில் மக்களை குடியமர்த்துவது அரசுக்கு சவாலாக உள்ளது. இந்த குடும்பத்தை அந்த சமூகம் அழைக்கிறது. அவர்களும் அங்கு வாழ விரும்புகின்றனர். இந்த குடும்பம் மோசமான குடும்பம் என்று யாருமே சொல்லவில்லை. இவர்களை வலுக்கட்டாயமாக வெளிநாட்டுக்கு அனுப்ப அரசு பணத்தை தொடர்ந்து செலவழிப்பதைவிட கடினமாக உழைக்கும் இந்த குடும்பத்தை அவர்கள் விரும்பியபடியும், உள்ளூர் சமூகம் விரும்பியபடியும் Biloela சமூகத்தோடு இணைய அரசு அனுமதிக்கவேண்டும். அரசு அரசியல் செய்யக்கூடாது” என்று லேபர் கட்சியின் முன்னாள் தலைவர் Bill Shorten கூறியுள்ளார்.

பிரியா குடும்பத்தின் மீதான கொடுமையை குடிவரவுத்துறை அமைச்சர் DavidColeman உடனடி நிறுத்த வேண்டும் என்றும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிரியா குடும்பத்தை நாட்டில் வாழ அனுமதிக்கவேண்டும் என்றும் லேபர் கட்சியின் குடிவரவுத்துறை தொடர்பான அறிவிப்பாளரும், செனட்டருமான Kristina Keneally தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

பிரியா குடும்பத்தை பொறுத்தவரை நடேஸ், Vinnies நிறுவனத்தில் தன்னார்வ ஊழியராக பணிபுரிந்துள்ளார்; பிரியா உள்ளூர் மருத்துவமனையில் கறி சமைத்து உதவியுள்ளார். இருவரும் இந்த நாட்டில் திருமணம் செய்தவர்கள். இரண்டு குழந்தைகளும் இங்கேயே பிறந்தவர்கள். அவர்கள் தொடர்ந்து இந்த நாட்டில் வாழும்வகையில் பிரதமர் ScottMorrison அனுமதி தரவேண்டும் என்று முக்கிய எதிர்கட்சியான லேபர் கட்சியின் தலைவர் Anthony Albanese வலியுறுத்தியுள்ளார்.

பிரியா குடும்பத்தை இரவோடு இரவாக நாடு கடத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது அரசு மனிதாபிமானமற்று செயல்பட்டதைக் காட்டுகிறது என்றும், Scott Morrison, Peter Dutton மற்றும் David Coleman ஆஸ்திரேலிய மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவேண்டும் என்றும் எதிர்கட்சியான கிரீன்ஸ் கட்சியின் குடிவரவு தொடர்பான அறிவிப்பாளர் செனட்டர் Nick McKim கூறினார். பிரியா குடும்பம் மீண்டும் Biloela சமூகத்தில் இணைய அரசு அனுமதிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரியா குடும்பத்தை பாதுகாப்பாக இங்கு வாழ Morrison அரசு அனுமதிக்கவில்லை எனில், ஒரு அரசு நிறைவேற்றவேண்டிய அடிப்படை கடமையிலிருந்து அது தவறுகிறது என்றும், அப்படியான அரசு சர்வதேச சமூகத்தின் முன்பு தனது சர்வதேச கடமையிலிருந்து தவறியதாக பார்க்கப்படும் என்று ஆஸ்திரேலிய தொழிற்சங்க கூட்டமைப்பின் Australian Council of Trade Unions (ACTU) தலைவர் Michele O’Neil கூறினார்.

இலங்கையில் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று பிரியா குடும்பம் கூறுவது புரிந்துகொள்ளக்கூடியதே என்றும், இவர்கள் விடுதலைப்புலிகளோடு முன்பு தொடர்புடையவர்கள் என்பதால் அவர்களின் அச்சம் நியாமான ஓன்று என்றும், இலங்கையில் இப்போதும் விடுதலைப்புலிகளோடு முன்பு தொடர்புடையவர்கள் காணாமற்போவது அல்லது துன்புறுத்தப்படுதல் நடைபெறுகிறது என்றும் Deakin Universityயின் சர்வதேச அரசியல் துறை பேராசிரியர் Damien Kingsbury, ABC ஊடகத்திடம் கடந்த வாரம் தெரிவித்தார்.

