ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டக்காரரும் ஆட்ட வர்ணனையாளருமான மைக்கல் ஸ்லேட்டர் கிளம்பவிருந்த விமானத்துக்குள் பெண்களுடன் வாக்குவாதம் செய்தார் என்ற குற்றத்தின்பேரில் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிட்னியிலிருந்து Wagga-வுக்கு புறப்படவிருந்த Qantas விமானத்திற்குள் இடம்பெற்றதாக 2GB செய்தி வெளியிட்டுள்ளது.
விமானத்துக்குள் மைக்கலுடன் பயணம் செய்யவிருந்த இரண்டு பெண் தோழிகளுடன் அவருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்ததால், மைக்கல் ஸ்லேட்டர் தனது இருக்கையிலிருந்து எழுந்து சென்று விமான கழிவறையினுள் தன்னைப்பூட்டிக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப்பிரச்சினையை தணிப்பதில் தோல்வியடைந்த விமானப்பணியாளர்கள் விமானம் புறப்படுவதற்கு முன்னரே மைக்கலை விமானத்திலிருந்து இறங்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தினால் இறக்கப்பட்ட மைக்கல் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளினால் விசாரிக்கப்பட்டார்.
இந்தச்சம்பவத்தை உறுதிசெய்தபோதும் வாக்குவாதத்திற்கான காரணத்தைக் வெளியிட மறுத்துள்ள மைக்கல் ஸ்லேட்டர் தரப்பு கழிவறையினுள் தன்னை வைத்துப் பூட்டிக்கொண்டார் என்ற தகவலையும் மறுத்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான மைக்கல் ஸ்லேட்டர் தற்போது ஆட்ட வர்ணனையாளராக பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
