தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.
1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கிய மகேந்திரன் 'நிமிர்', 'சீதக்காதி', 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் மகேந்திரன் சில தினங்களுக்கு முன்னால், சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மகேந்திரனின் உடல் பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
