வீதி விதிமுறைகளை மீறியது உட்பட பல்வேறு தண்டப்பணங்களை செலுத்தமுடியாமல் நீதிமன்ற பிடியாணையின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பூர்வகுடி பெண்களுக்கு அந்த அறவீட்டுப்பணத்தை செலுத்தி அவர்களை சிறையிலிருந்து மீட்கும் நடடிக்கையொன்று பெருமளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள பூர்வகுடி பெண்களின் அறவிடமுடியா அபராதங்களுக்கு பணம் செலுத்தி அவர்களை மீட்கும் பணியே இவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
சிறிய தொகை முதல் பெரிய தொகைவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் டொலர்கள் வரையிலான அபராத தொகையை செலுத்துவதன் மூலம் சிறையிலுள்ள பூர்வகுடி பெண்கள் முப்பது பேரை விடுதலை செய்யமுடியும் என்று மேற்படி நடவடிக்கையை மேற்காண்டுவரும் தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் அபராத தொகையை செலுத்தாதவர்கள் அந்தப்பணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அந்த ஏற்பாட்டை தொடர்ந்தும் மதிக்காதவர்கள் அல்லது பணத்தை செலுத்தாதவர்கள் பிடியாணை அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவர். இந்த நடைமுறையின் பிரகாரம், கைது செய்யப்பட்டு மேற்கு ஆஸ்திரேலிய சிறைகளிலுள்ள பூர்வகுடி பெண்கள் முப்பது பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
