நம் நாட்டில் மூன்று பேரில் ஒருவரின் கடவுச் சொற்கள் (passwords) திருடப்பட்டு அல்லது சமரசம் செய்யப்பட்டு, அதன் வழியாக மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
மேலும், நான்கு பேரில் ஒருவரது வங்கிக் கணக்கு அல்லது நாணய அட்டை (credit card) விவரங்கள் திருடப்பட்டு பெரும் தொகை பணத்தை இழந்துள்ளார்கள்.

அண்மைக்காலத்தில், Covid-19 முடக்க நிலை கட்டுப்பாடுகள் காரணமாக, கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க முடியாத சூழலில், பொருட்கள் இணைய வழியாக வாங்கப் பட்டு, அவற்றை வீட்டிற்கு விநியோகம் செய்யப்படுகிறது.
மோசடி செய்பவர்கள் இதனையும் விட்டு விடவில்லை.
உங்களுக்கு ஒரு பார்சல் வருகிறது, மேலதிகமாக அறிய இங்கே கிளிக் செய்யவும்
என்று குறுஞ்செய்தி (text message) ஒன்றை அனுப்பி, அதை உண்மை என்று நம்பி இணைப்பை சொடுக்குபவர்களது மொபைல் தொலைபேசியில் malware எனப்படும் செயலியைப் புகுத்தி மிகப் பெரும் திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
இதுவரை 10,000 பேர் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
“இணைய வழி மோசடிகளுக்குள்ளாகும் வணிக நிறுவனங்கள் மீது தான் அதிக கவனம் இதுவரை செலுத்தப்பட்டது. அதிகப்படியான தனிநபர்கள் அடிக்கடி மோசடிகளில் சிக்கியுள்ளனர் என்பதை இந்தத் தரவு காட்டுகிறது” என்று Google Australia பேச்சாளர் Samantha Yorke கூறினார்.
ஆய்வில் பதிலளித்த ஐந்து பேரில் ஒருவர், பல கணக்குகளுக்கு ஒரே மாதிரியான கடவுச் சொல்லை வைத்திருப்பதாகவும், கடவுச் சொல்லை வேறொருவருக்கு மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ பகிர்ந்து கொள்வதை ஒப்புக் கொண்டதாகவும் Samantha Yorke மேலும் கூறினார்.
இணைய வழி பொருட்களை வாங்குபவர்கள், இணைய முகவரிக்கு அருகில் ஒரு “பூட்டு” சின்னம் இருப்பதை அவதானிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அந்த சின்னம் பாதுகாப்பான, மறைகுறியாக்கப்பட்ட (encrypted) இணைப்பு என்பதைக் குறிக்கும்.

சரி, பார்சல் வந்திருக்கிறது என்ற குறுஞ்செய்தியை என்ன செய்வது?
ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
அதனை உடனே அழித்து விடும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
