பெற்றோரை வரவழைப்பதை கடினமாக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு மீளப்பெற்றது!

Australian government reverse the decisin parent visa.

Source: SBS

வெளிநாடுகளிலிருந்து தங்கள் பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்க விரும்புபவர்கள், அதிகம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல புதிய நடைமுறையை ஆஸ்திரேலிய அரசு  உத்தியோகப்பூர்வமாக மீளப்பெற்றுள்ளது.

இதுவரைகாலமும் தங்களது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவர்களாக இருக்கவேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, இந்த கூட்டுவருமான தொகையை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அரசு அதிகரித்திருந்தது.

அதேபோல, தனி நபர் ஒருவர் தனது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதானால், அவர் ஆண்டொன்றுக்கு 45 ஆயிரத்து 185 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்கவேண்டும் என்ற பழைய சட்டம் திருத்தப்பட்டு, அவர் 86 ஆயிரத்து 606 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவராக இருக்கவேண்டும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இந்தப் பின்னணியில் அரசு கொண்டுவந்த இம்மாற்றம் பலரையும் மிகமோசமாகப் பாதிக்கும் ஒன்று எனச் சுட்டிக்காட்டிய கிரீன்ஸ் கட்சி, இச்சட்டமாற்றத்தை ரத்துச் செய்யும்வகையில் நாடாளுமன்றில் disallowance motion கொண்டுவரப்படும் என்றும் ஏனைய கட்சி அங்கத்தவர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

அதேபோல் குறித்த சட்டமாற்றத்திற்கெதிராக குடிவரவு முகவர்கள் பொதுமக்களிடமிருந்து கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.

இப்படி பலதரப்புக்களிலிருந்தும் குறித்த சட்டமாற்றத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இப்புதிய மாற்றத்தைக் கைவிடத் தீர்மானித்த அரசு இதற்குரிய ஆவணங்களை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட புதிய நடைமுறை மீளப்பெறப்பட்டு பழைய சட்டமே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


1 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now