ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்துகொண்டிருந்த 20 இலங்கையர்களை நடுக்கடலில்வைத்து இடைமறித்து கிறிஸ்மஸ்தீவுகளுக்கு கொண்டுவந்த ஆஸ்திரேலிய கடற்படையினர் நேற்று புதன் கிழமை சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக The Australian செய்திவெளியிட்டுள்ளது.
கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தற்கொலைக்குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் - மே மாத முற்பகுதியில் - அங்கிருந்து புறப்பட்டதாக கருதப்படும் இந்த படகு ஆஸ்திரேலிய கடற்படையினரால் கடந்தவாரம் இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
நடுக்கடலில்வைத்து பிடிக்கப்பட்ட அனைவரும் அண்மையில் மீளத்திறக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு முகாமுக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன என்றும் இவர்கள் அனைவரதும் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஐந்து வருடங்களின் பின்னர் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்பட்ட முதலாவது அகதிகள் படகு இதுவென்று குறிப்பிடப்படுகின்றது.
