பயங்கரவாதக்குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் இலங்கையை சேர்ந்த கமீர் நிஜாப்தீனுக்கு நீதி கோரி ஆஸ்திரேலியாவின் change.org இணையத்தளத்தில் கையெழுத்துவேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எந்த முகாந்திரமும் இல்லாமல் கமீர் நிஜாப்தீனை கைது செய்தது மட்டுமல்லாமல், அவருக்கு உரிய சட்ட வசதிகளை மறுத்தும், அவர் தொடர்பான செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டும் வருகின்ற அரச அதிகார போக்கை கண்டித்து, மக்களிடம் ஆதரவு கோரி இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
change.org இணையத்தில் ‘Justice for Kamer’ என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் -
கமீர் நிஜாப்தீன் வைத்திருந்த பழைய கணினியொன்றிலிருந்து எடுக்கப்பட்ட நோட் புத்தகத்தை ஆதாரமாகக்கொண்டு இந்தக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நிஜாப்தீனிடமிருந்து அது கைப்பற்றப்பட்டதல்ல. அந்தக்கணினி நிஜாப்தீனால் பல மாதங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டிருந்த ஒன்று. அத்துடன் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நோட் புத்தகத்தில் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் எதுவும் நிஜாப்பதீனின் கையெழுத்தில் எழுதப்பட்டவையும் அல்ல.
கைது செய்யப்பட்டிருக்கும் நிஜாப்தீனை யாரும் பார்க்கமுடியாதுள்ளது. அவருக்குரிய சட்ட உதவிகள் எதுவும் வழங்க முடியாமல் உள்ளது. பெற்றோர் உறவினர்கள்கூட நேரில் சென்று பார்க்கமுடியாதுள்ளது. அடிப்படை உரிமைகள் அனைத்தும் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
உள்ளூரிலும் வெளிநாட்டிலும் அவர் தொடர்பான அபாண்டமான செய்திகளை ஊடகங்கள் புனைந்துகொண்டிருக்கின்றன.
சமூகத்தின் பெறுமதி மிக்க இளைஞனாகவும் உற்றார் - உறவினர் - நண்பர்கள் என்று எல்லோருக்கும் நற்குணம் கொண்ட மனிதனாகவும் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தியவர் நிஜாப்தீன்.
- இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்டடுள்ளது.
