ஆஸ்திரேலியர்கள் இவ்வருடத்திற்கான Tax return-வருமான வரித்தாக்கலை மேற்கொள்ளும்போது அவதானத்துடன் சரியான தகவல்களை வழங்குமாறு வரி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
2014-15ம் நிதியாண்டில் வரி அலுவலகத்திற்குக் கிடைக்கவேண்டிய பணத்தை விட சுமார் 8.7 பில்லியன் டொலர்கள் குறைவாகவே கிடைத்துள்ளதாக வரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வருமான வரித்தாக்கல் செய்யும் ஒருவர், தான் ஈட்டிய உண்மையான வருமானத்தை குறிப்பிடாமல் இருத்தல், வேலை சம்பந்தமாக ஏற்படும் செலவுகளை வேண்டுமென்றே அதிகமாக குறிப்பிடுதல் போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாலேயே வரி அலுவலகத்திற்கு ஆண்டொன்றுக்கு பெருந்தொகை நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இம்முறை தாக்கல் செய்யப்படும் வரிவிண்ணப்பங்கள் அனைத்தும் மிகக் கவனமாக பரிசீலிக்கப்படவுள்ளதாக வரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வேண்டுமென்றே பொய்யான தகவல்கள் வழங்குபவர்களை கண்காணிக்கவென விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இவ்வாறு கண்காணிக்கப்படவுள்ளதாகவும் வரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் வரி விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யும் போது நாம் விடும் சில தவறுகளும் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மிக அவதானத்துடன் வரி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
