நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வளர்ப்பு பிராணிகளை சித்திரவதை செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் உட்பட சிறைத்தண்டனையை விதிக்கும்வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தப்புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் வீட்டுப்பிராணிகளை சித்திரவதை செய்யும் பிராணி வளர்ப்பாளர்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் டொலர் வரையான அபராதம் மற்றும்/அல்லது இரண்டு வருடம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு பிராணிகளுக்கு சரியாக உணவளிக்காமல் அல்லது உரிய உறைவிடம் வழங்காத உரிமையாளர்கள் 16 ஆயிரத்து 500 டொலர் வரையான அபராதமும் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனைக்கு முகங்கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும் - நாய், பூனைகளை அடித்து துன்புறுத்துபவர்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் டொலர் வரையான அபராதமும் இரண்டு வருடங்கள் வரையான சிறைத்தண்டனைக்கு முகங்கொடுக்கும் வாய்ப்புண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேலஸ் மாநில நாடாளுமன்றில் அனுமதி கிடைத்தபின்னர் அடுத்த ஆண்டுமுதல் இச்சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்திருத்தம் நடைமுறைக்குவரும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் இதுவே மிருகவதைக்கெதிரான மிகக்கடும் சட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
