லிபரல் கட்சியின் சர்ச்சைக்குரிய புள்ளியும் உள்துறை அமைச்சருமான Peter Dutton-க்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாடாளுமன்றத்தில் அவநம்பிக்கை பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நாடுகடத்தப்படவிருந்த ஐரோப்பியர்கள் இருவரது வீசா விவகாரத்தில் Peter Dutton தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும், இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பொறுப்பற்ற வகையில் - தொடர்ந்தும் மௌனம் காத்துவருகிறார் என்றும் Peter Dutton மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
எதேச்சாதிகாரத்துடன் செயற்பட்டுவரும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அடுத்தவாரம் நாடாளுமன்றம் கூடும்போது அவநம்பிக்கை பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக Greens கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு லேபர் கட்சியும் களத்தில் இறங்கவுள்ளதாக கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் Malcolm Turnbull விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டார் என்று கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்புக்களை சந்தித்துவரும் Peter Dutton-க்கு தற்போது எழுந்துள்ள அவநம்பிக்கை விவகாரம் மிகுந்த சிக்கலாக உள்ளது என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
