'இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் வரக்கூடிய அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருந்துகொண்டுதானிருக்கிறது. மக்கள் ஆட்கடத்தல்காரர்களை நம்பி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற வாய்ப்புக்கள் இன்னமும் தொடர்ந்தவண்ணமுள்ளது. ஆகவே, நவுறு - மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகளை நியூசிலாந்தில் குடியேற அனுமதிப்பது ஆட்கடத்தல்காரர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துவிடக்கூடும். அந்தப் பேச்சினை இப்போதைக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவே கூடாது' - என்று உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் கூறியிருக்கிறார்.
Sky News செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் - மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவது என்ற திட்டத்தில் எந்த மாற்றங்களும் கொண்டுவரக்கூடாது. அதுவே, நிரந்தர தீர்வாக அமையும். நியூசிலாந்தில் அகதிகளை மீளக்குடியமர்த்துவது என்பது ஆட்கடத்தல்காரரர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுப்பது போன்றது. இந்த ஒட்டுமொத்த படகுப்பயண அவலத்தில் எமக்கு எதிரிகள் இந்த ஆட்கடத்தல்காரர்களே. அந்த எதிரிகளிடம் நாங்களே ஆயுதங்களை கொடுத்துவிட்டு, புதிய கொள்கைகள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. நியூசிலாந்தில் அகதிகளை மீளக்குடியமர்த்தும் பேச்சுக்கள் நிச்சயமாக ஆட்கடத்தல்காரர்கள் தங்களது வியாபரத்தை அகதிகள் மத்தியில் சந்தைப்படுத்துவதற்கே உதவிபுரியும் - என்று கூறியுள்ளார்.
