நாட்டின் பல பாகங்களிலும் காட்டுத்தீ மிகமோசமான அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸனை பதவி நீக்குமாறு ஆஸ்திரேலிய ஆளுனர் நாயகத்திடம் கோரிக்கையை முன்வைக்கும் கையெழுத்துவேட்டை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட் மொறிஸனை பதவி நீக்குவது மாத்திரமல்லாமல்லாமல் பொறுப்பற்ற நிர்வாகத்தை நடத்திவரும் லிபரல்களின் ஆட்சியை கலைக்குமாறும் கோருகின்ற இந்த கையெழுத்துவேட்டையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.
'நாட்டில் மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இடம்பெற்றிருக்கும் இந்த வேளையில், பல்லின மக்களும் சமூக அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் வெளிநாட்டவர்களும் இங்கு வந்து தீயணைக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்தியிருக்கிறார்கள். தொண்டர்களாக களத்தில் நின்று தீயணைப்பு படைவீரர்களுக்கு உதவி செய்கிறார்கள்'.
'ஆனால், நாட்டின் தலைவராக - பொறுப்புள்ள பிரதமராக - தனது ஆளுமையை இந்த நேரத்தில் முன்னிறுத்தவேண்டிய ஸ்கொட் மொறிஸன், ஹவாய் சென்று தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார். நம்பிக்கையுடன் தெரிவுசெய்த மக்கள் பிரதிநிதி இவ்வளவு தூரம் மக்களுக்கு துரோகம் இழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது'.
'இதற்குமேலும் இந்த லிபரல் அரசை மக்கள் நம்பமுடியாது. ஆளுனர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை கலைத்து, உரிய மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு நாட்டுமக்களுக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கவேண்டும்' - என்று www.change.org இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துவேட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
