நமது வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்பும்போது நாம் செலுத்தும் பணத்திற்கேற்ற பெற்றோல் நிரப்பப்படுகிறது என நினைப்போம். ஆனால் அது தவறு என நிரூபித்திருக்கிறது சமீபத்திய சோதனை முடிவு.
நாம் செலுத்தும் பணத்திற்குரிய பெற்றோலைவிடவும் குறைந்தளவு பெற்றோலே வாகனங்களின் எரிபொருள் தாங்கியில் நிரப்பப்படுவதாக நாடுமுழுவதுமுள்ள சுமார் 328 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மூலம் தெரியவந்துள்ளதாக National Measurement Institute (NMI) தெரிவித்துள்ளது.
இதன்படி நாடு முழுவதுமுள்ள 7 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள தாங்கிகளிலிருந்து தவறான அளவில்-அதாவது நிரப்பப்படவேண்டிய அளவைவிடவும் குறைந்தளவு- எரிபொருளே வாகனங்களில் நிரப்பப்படுகின்றமை அதிரடி சோதனை மூலம் தெரியவந்துள்ளதாக National Measurement Institute (NMI)-இன் acting CEO Bill Loizidesதெரிவித்தார்.
இந்நிலைமை கடந்த 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து எரிபொருள் தாங்கியில் சுட்டிக்காட்டப்பட்ட அளவைவிடவும் குறைந்தளவு எரிபொருளை விற்பனை செய்த 9 வர்த்தகர்களுக்கு சுமார் 15,750 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன் மேலும் பலர் சட்டநடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மெல்பேர்ன் மற்றும் அடிலெய்ட் உள்ளிட்ட பகுதிகளில் பெற்றோல் விலை இவ்வாரம் லீட்டருக்கு 1.75 டொலர்களாக அதிகரித்துள்ள நிலையில் குறித்த ஆய்வு முடிவு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
