விக்டோரியாவிலிருந்து சட்ட விரோதமாக தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் விக்டோரியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காரில் வந்த இவர்கள் இருவரும், இரு பாரவூர்திகளுக்கிடையில் மறைந்து பயணம்செய்தபடி விக்டோரிய - தெற்கு ஆஸ்திரேலிய எல்லையில் பொலீஸ் தடையை மீறி உள்ளே சென்று விட்டபோதிலும் மூன்று மணிநேரத்திற்கு பிறகு பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டார்கள்.
இதுதவிர விக்டோரியாவிலிருந்து சென்ற மூவர் பொய்யான மருத்துவ காரணத்தைக்கூறி தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 10 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை விக்டோரியாவிலிருந்து அடிலெய்ட்டுக்கு சென்ற சரக்கு ரயிலில் பதுங்கியிருந்து சென்ற நான்கு விக்டோரியர்கள் சட்டவிரோதமாக மாநிலத்துக்குள் நுழைய முற்பட்டார்கள் என்ற குற்றத்தில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விக்டோரியர்கள் சிலரது இவ்வகையான நடவடிக்கைகள் குறித்து தாங்கள் விசனம் கொள்வதாக தெரிவித்துள்ள தெற்கு ஆஸ்திரேலிய பொலீஸார், அனைவரும் சட்டத்தை மதித்து நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
