இந்தியாவில் ஏழை மக்கள் அதிகமாக வாழும் பீகார் மாநிலத்தில் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியாத பெரும்பாலான குடும்பத்தினர் ஆண்களை கடத்திச்சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கின்றனர்.
சமீபத்தில் இளம் பொறியியலாளரான வினோத் குமாரை, பெண் குடும்பத்தார் கடத்தி சென்று துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அழுது கொண்டிருக்கும் அவருக்கு திருமணம் நடைபெறும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பிறகு வினோத் குமார் தற்போது தப்பித்து அவருடைய சொந்த மாநிலமான ஜார்காண்ட் மாநிலத்தில் வசித்து வருகிறார்.
ஆண்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் நடைபெற்றதாக 2016ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 3000 முறைபாடுகள் போலீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இத்திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
