ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறாத 2.2 மில்லியன் பேர், தேர்தல்களில் வாக்களிக்க முடியாதிருக்கிறார்கள் என்று மே மாதம் நடந்த தேர்தல் குறித்த விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.
எட்டு வருடங்களாக, சிட்னியில் வசித்து வரும் சில்வியன் ஃகார்சியா (Sylvain Garcia), ஃப்ரான்ஸ் நாட்டில் பிறந்தவர். ஆஸ்திரேலிய தேர்தல் சட்டம், 1981 ஆம் ஆண்டு திருத்தப்பட்டதன் பின்னர், நிரந்தர வதிவிடம் பெற்றவர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டிய இவர், கடந்த தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என்று கூறினார்.
“29 வயதாகும் நான், ஒரு ஃப்ரெஞ்ச் குடிமகன் என்றில்லாமல், ஒரு ஆஸ்திரேலியனாகவே உணர்கிறேன்” என்று, அவர் சமர்ப்பித்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னைப் போல, நிரந்தர வதிவிட உரிமை பெற்ற பலரும் உணர்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர்களும் ஏன் ஆஸ்திரேலிய தேர்தலில் பங்கு கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.”
ஆஸ்திரேலிய புள்ளிவிபரத்துறையின் தரவுகளின்படி 2.2 மில்லியன் பேர் ஆச்திரேலியாவில் நிரத்தர வதிவிட உரிமை பெற்று, ஆனால் குடியுரிமை இன்னமும் பெறாமல் வாழ்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டினார்.

இதன் தாக்கம் NSW மாநிலத்தில் மிக அதிகம் (ஆஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடம் பெற்றவர்களில் 36 சதவீதத்தினர் இங்கு தான் வாழ்கிறார்கள்). அதைத்தொடர்ந்து விக்டோரிய மாநிலம் (34%), மற்றும் குயீன்ஸ்லாந்து மாநிலங்கள் (11%).
பிரித்தானிய குடியுரிமை பெற தகுதி வாய்ந்தவர்கள் சிலர், ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றிருந்தாலே தேர்தல்களில் வாக்களிக்க முடியும். ஆனால், அவர்கள் 1984 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் நாளுக்கு முதல் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்தலில் வாக்களிக்கும் ஒரே காரணத்திற்காக, சில்வியன் குடியுரிமைக்கு அடுத்த வருடம் விண்ணப்பிக்க இருக்கிறார்.
“நான் பல வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கிறேன், ஆஸ்திரேலிய விழுமியங்களுடன் வாழ பழகிக் கொண்டுள்ளேன். இந்த நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் நான் வாழ விரும்புகிறேன்.”
தேர்தல் நாளுக்கு முன்னரே வாக்களிக்க அனுமதிப்பது நல்லதா?
தேர்தல் நடந்த முறை குறித்து நடக்கும் இந்த விசாரணையில், இந்த முறை அளவுக்கதிகமானவர்கள் தேர்தல் நாளுக்கு முன்னரே தம் வாக்குகளைப் பதிந்து கொண்டது குறித்தும் ஆராய்கிறது.
மே 18 ஆம் நாள் தேர்தல் நடப்பதற்கு முந்தைய மூன்று வாரங்களில் 4.7 மில்லியன் பேர் (கிட்டத்தட்ட, ஒன்றில் மூன்று) வாக்காளர்கள் வாக்களித்து விட்டனர் என்பது நோக்கத்தக்கது.
இது, தேர்தல் பிரச்சாரக் காலம் என்றால் என்பதை மாற்றியமைத்துள்ளது என்று, அரசியலமைப்பு குறித்த வழக்குரைஞர் ஜோர்ஜ் வில்லியம்ஸ் (George Williams) கூறினார்.
“முழுமையான தரவுகள் கிடைக்க முன்னரே பல வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்றதால், தேர்தல் முடிவுகள் மாற்றியமைத்துள்ளன.”
தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மட்டுமே வாக்களிக்க அனுமதிப்பதால், அந்த சிக்கலை குறைக்கலாம் என்றும், ஒரே நாளில் தேர்தலை முடித்து விடாமல், இரண்டு மூன்று நாட்கள் தேற்தலை நடத்தலாம் அல்லது, இணைய வழியாக வாக்களிக்க வழி செய்யலாம் என்றும் அவர் மேலும் கருத்து கூறினார்.
.
