மடகஸ்கார் மற்றும் மொறீஷியஸ் தீவுகளுக்கு அண்மையில் ரீயூனியன் என்ற பிரான்ஸிற்கு சொந்தமான தீவில் படகு மூலம் சென்றடைந்த 120 இலங்கையர்களில் 60 பேரை அந்நாட்டு அரசு கொழும்புக்கு திரும்பி அனுப்பியுள்ளது. மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 60 பேரும் கடந்த திங்கட்கிழமை திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று அந்நாட்டு அரசு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் முதல் ஆறுலட்சம் இலங்கை ரூபா பணத்தை கொடுத்து 120 இலங்கையர்கள் சுமார் நாலாயிரம் கிலோமீற்றர் படகில் பயணம் செய்து கடந்த ஏப்ரல் 12 ஆம் ரியூனியன் தீவை சென்றடைந்திருக்கிறார்கள். இவர்களை இந்தோனேஷிய ஓட்டிகள் மூவர் அழைத்துவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவருக்கும் எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் மே 15 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரியூனியன் தீவுக்கு சென்றடைந்த சுமார் 273 இலங்கை அகதிகளில் 130 பேர் இன்னமும் திருப்பி அனுப்பப்படாமலுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
