தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கன மழையினால் Hawkesburyல் Gospers Mountainல் பல மாதங்களாக எரிந்து வந்த மாபெரும் காட்டுத்தீ கடந்த திங்கட்கிழமை அணைக்கப்பட்டுவிட்டது. ஆனால் கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி 33 இடங்களில் காட்டுத்தீ இன்னும் எரிந்து வருவதாகவும் அதில் ஐந்து இடங்களில் கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதாகவும் NSW RFS தெரிவிக்கிறது.
மழை பெய்வதற்கு முன்னர் கடந்த வாரம் NSW மாநிலத்தில் 60 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வந்தது அதில் 33 இடங்களில் கட்டுக்கடங்காமல் எரிந்து வந்தது ஆனால் மழையினால் அதில் பாதி இடங்களில் காட்டுத்தீ தற்போது அணைக்கப்பட்டுவிட்டது.
தற்போது கட்டுக்கடங்காமல் ஐந்து இடங்களில் எரிந்து வருவதாக கூறப்படும் காட்டுத்தீ மாநிலத்தின் தெற்கு பகுதியான Snowy Valley மற்றும் Bega Valleyயிலேயே எரிந்துவருகிறது. ஆனால் அவை ஒரு சிலநாட்களில் அணைக்கப்பட்டுவிடும் என RFS பேச்சாளர் கூறுகிறார். மற்றைய இடங்களில் எரிந்து வரும் காட்டுத்தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு இவ்வார இறுதியில் அணைக்கப்பட்டுவிடும் என்றும் இது முழுமையான ஒரு அதிசயம் என்றும் மேலும் வியப்பை வெளியிட்டார் RFS பேச்சாளர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் காட்டுத்தீயுடன் தீயணைப்புவீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த திங்கட்க்கிழமை Hawkesbury, Shoalheaven, Wollondilly, Richmond Valley, Blue Mountains, Muswellbrook மற்றும் Wingecarribee பகுதிகளில் எரிந்து வந்த மிகப் பெரிய காட்டுத்தீ அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்டன. ஆனால் காட்டுத்தீ காலம் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் காட்டுத்தீ ஆபத்து உள்ளன என்றும் NSW RFS கூறுகிறது.
