பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள மற்றுமொரு அகதி இன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓடுகிற பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட றொஹின்யா அகதி ஒருவரே இன்று காலை 11 மணியளவில் மரணமடைந்ததாக The Refugee Action Coalition-இன் Ian Rintoul தெரிவித்தார்.
மியான்மாரிலிருந்து வந்து புகலிடம் கோரிய 32 வயதுடைய இந்நபர் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் சிகிச்சைக்காக முன்பு ஆஸ்திரேலியா வந்திருந்ததாகவும் Ian Rintoul குறிப்பிட்டார்.
இன்று காலை மனுஸ் தீவில் அகதி ஒருவர் மரணமடைந்ததை உறுதிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு இதுகுறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
இதேவேளை கடந்த ஜுலை 2013 முதல் கடல்கடந்த தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட அகதிகளில் இதுவரை 7 பேர் மனுஸ் தீவிலும் மூவர் நவுறு தீவிலும் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
