ஆஸ்திரேலியாவின் Regional பகுதிகளில் குடியமர்ந்தவர்களில் பெரும்பாலானோர் நகர்ப்பகுதிகளை நோக்கி வந்து குடியேறுகிறார்கள் என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் Regional பகுதிகளில் குடியேறிய குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 வீதமானோர் இவ்வாறு நகரங்களை நோக்கி இடம்பெயர்வதாக குறிப்பிடப்படுகிறது.
மக்களை Regionalபகுதிகளில் குடியமருமாறு ஊக்குவித்துவரும் ஆஸ்திரேலிய அரசு இதற்கேற்றவாறு குடிவரவு விதிகளையும் மாற்றியமைத்து ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற புதிய குடிவரவாளர்கள் நகர்ப்புறங்களிலிருந்து தொலைவில் குடியேறவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள பின்னணியில், Regional பிரதேசங்களில் சென்று குடியேறும் குடிவரவாளர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெற்றவுடன் நகர்பகுதிக்கு வந்து குடியேறுவதையே விரும்புகிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் சீனர்களும் மெல்பனில் இந்தியர்களும் இவ்வாறான நகர்புறத்தை அண்டிய குடியேற்றத்தை விரும்புகிறார்கள்.
ஆய்வினை மேற்கொண்ட தேசிய பல்கலைக்கழகத்தினர் இது குறித்து கூறும்போது - புதிய குடிவரவாளர்கள் Regional பிராந்தியங்களில் சென்று முதலில் குடியேறவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் விசா முறைகளை அரசு கொண்டுவரலாம். அந்த விசா விதிமுறைகளின்படி புதிய குடிவரவாளர்களை அங்கு செல்லுமாறு பணிக்கலாம். ஆனால், அங்கேயே தொடர்ந்து வாழும்படி வற்புறுத்தமுடியாது. ஆகவே, பிராந்திய குடியேற்றங்களில் நிரந்தர விருப்பத்தை ஏற்படுத்தவல்ல ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
