ஆஸ்திரேலியாவிற்கு Skilled migration ஊடாக குடியேறுபவர்கள் regional area- நகரம் அல்லாத பகுதிகளில் வசிப்பதற்கு முன்வந்தால், அவர்களது விசா விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சிட்னி மெல்பேர்ன் போன்ற நகரங்களுக்கு புதிதாக குடியேறுபவர்கள் வந்து குவிவதால் இந்நகரங்களில் நெருக்கடி ஏற்படுவதாகத் தெரிவித்த அரசு, regional பகுதிகளில் புதிய குடியேறிகளை அனுப்புவதற்கான திட்டங்களை வகுத்துவரும் நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களினதும் treasurers-கருவூலக்காப்பாளர்களுடனும் கன்பராவில் பேச்சு நடத்தியுள்ள குடிவரவு அமைச்சர் David Coleman இன்று இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.
Regional பகுதிகளில் புதிய குடியேறிகளை அனுப்பும் திட்டத்திற்கென அடுத்த 4 ஆண்டுகளுக்கு 19.4 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், regional பகுதிகளிலுள்ள வியாபார நிறுவனங்களில் மேலதிக பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் குடிவரவு அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் regional பகுதிகளில் வாழ இணங்கும் புதிய குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவதுடன் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வேலைக்கு வரவழைப்பது தொடர்பில் சில உள்ளூர் கவுன்சில்களுடன் அரசு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இனிவரும் நாட்களில் ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்கள் சுமார் 5 வருடங்கள் regional பகுதிகளில் வாழ்ந்தால் மாத்திரமே நிரந்தர வதிவிட உரிமை பெறமுடியும் என்பதாக மாற்றம் கொண்டுவரப்படலாம் என அரசு ஏற்கனவே கோடி காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
