மேற்கு ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அனுசரிக்கப்படும் ANZAC தின நிகழ்வுகளில் இனிமேல் பூர்வீக குடிமக்களின் கொடிகளை பயன்படுத்துவதற்கும், அவர்களின் கலாச்சார பின்னணி நடனங்கள் அல்லது சடங்குகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக மேற்கு ஆஸ்திரேலியாவின் Returned and Services League, Australia – சுருக்கமாக RSL என்று அழைக்கப்படும் முன்னாள் ராணுவவீர்களின் அமைப்பு அறிவித்தது. ஆனால் இந்த தடையை தாம் விலக்கிக்கொள்வதாக RSL சற்று முன்னர் அறிவித்துள்ளது.
நாட்டைக்காக்க போரில் தியாகம் செய்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ANZAC தின நிகழ்வுகள் ஒரு இனத்தை சார்ந்ததல்ல என்றும், அது கலாச்சார நிகழ்வு அல்ல என்றும் எனவே அனைத்து நிகழ்சிகளும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்றும், ஆஸ்திரேலிய கொடி பயன்படுத்தப்படும் என்றும் பூர்வீக குடிமக்களை பிரதிபலிக்கும் கொடிகள் இனிமேல் பயன்படுத்தப்படாது என்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் RSL அமைப்பு அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து தற்போது தற்போது தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில RSL அமைப்பு தனது முடிவை கைவிடவேண்டும் என்று மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தைச் சார்ந்தவரும், பூர்வீக குடிமக்களின் பின்னணிகொண்டவருமான பெடரல் அமைச்சர் Ben Wyatt கேட்டுக்கொண்டார். நியூசிலாந்து நாட்டில் அந்த நாட்டின் பூர்வீக குடிமக்களின் மொழியிலும் ANZAC தின நிகழ்வுகள் நடந்துவருவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மேற்கு ஆஸ்திரேலிய மாநில RSL அமைப்பின் முடிவை எதிர்கட்சிகளில் ஒன்றான Greens கட்சியின் மேற்கு ஆஸ்திரேலிய செனட்டர் Rachel Siewert கண்டனம் செய்தார். RSL அமைப்பின் முடிவு பூர்வீக குடிமக்களை அவமதிக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
