மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விடயத்தில் உள்துறை அமைச்சர் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் பத்துமாத குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது bridging visa கடந்த தை - மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததையடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிமன்றம் நேற்று அறிவித்ததையடுத்து உள்துறை அமைச்சர் Peter Dutton இதில் தலையிட்டு அவர்களை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்க வேண்டுமென Biloela வாழ் மக்கள் பலரும் அகதிகள் செயற்பாட்டாளர்களும் கோரியுள்ளனர்.
குறித்த குடும்பம் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துள்ள அவர்கள், உள்துறை அமைச்சர் இக்குடும்பத்தின் நிலையை கருத்திற்கொண்டு செயற்படவேண்டுமென கோரியுள்ளனர்.
இதேவேளை நடேசலிங்கம்-பிரியா குடும்பம் குறித்த தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்வது தொடர்பில் சட்டத்தரணிகள் ஆலோசித்துவருகின்றனர்.
