காட்டுத்தீ - கொரோனா பேரிடர்களுக்கு பின்னர் முதல்தடவையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அடுத்தவாரம் வெளிநாட்டுக்கு பயணமாகிறார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜப்பானுக்கு சென்று அந்நாட்டு பிரதமரை சந்திக்கவுள்ள ஸ்கொட் மொறிஸன் நாடு திரும்பும் வழியில், பப்புவா நியூகினிக்கு குறும்பயணம் ஒன்றினை மேற்கொண்டு அந்நாட்டு தலைவரையும் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் புதிய பிரதரை சந்திக்கவுள்ள பிரதமர் ஸ்கொட் மொறிஸன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் சாத்தியங்கள் குறித்து பேசவுள்ளதாகவும் மொறிஸனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ இடம்பெற்றிருந்தபோது, பிரதமர் ஸ்கொட் மொறிஸன் ஹவாய் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார் என்ற விவகாரம் தேசிய ரீதியில் அவருக்கு எதிரான பெரும்புயலை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அவர் உடனடியாக நாடு திரும்பினார். தனது பயணம் பொறுப்பின்மையானது என்று கருதினால் மன்னிப்புகேட்பதாகவும் கூறினார். அந்த சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப்பயணத்துக்கு பின்னர், அடுத்தவாரம் முதன் முதலாக மீண்டும் வெளிநாடு செல்கிறார்.
போய் வரும் பயணத்தில் தான் நிச்சயம் கொரோனா வைரஸிடம் சிக்கமாட்டேன் என்று நம்புவதாக கூறியுள்ள மொறிஸன், நாடு திரும்பியதும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
