ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி கடந்த மார்ச் மாதம் 5.2 வீதமாக காணப்பட்ட வேலையற்றோர் வீதம் ஏப்ரல் மாதம் 6.2-ஆக (seasonally-adjusted) உயர்வடைந்துள்ளது.
220,500 முழுநேர வேலைகள் மற்றும் 373,800 பகுதிநேர வேலைகள் என மொத்தமாக 594,300 வேலைகள் கடந்த ஏப்ரல் மாதம் இழக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியான தரவுகள் கூறுகின்றன.
கொரோனா தொடர்பில் கடந்த மார்ச் இறுதியில் கொண்டுவரப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடுகளே இவ்வதிகரிப்புக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பெருமளவிலான ஆஸ்திரேலியர்கள் வேலைகளை இழந்துள்ளமை மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் இக்கடினகாலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டியுள்ளதாகவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார்.
ஆனால் வேலையற்றோர் வீதத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பு எதிர்பார்த்த ஒன்று எனத் தெரிவித்த அவர், இப்பாதிப்பு இன்னும் சிலகாலத்திற்கு தொடரப்போவதை தவிர்க்கமுடியாது எனவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தமது அரசு தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
