ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் newstart உள்ளிட்ட அரச கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்ற அரசின் முடிவு காரணமாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 2 வருடங்கள் நாட்டில் வாழ்ந்திருந்தால் அரசகொடுப்பனவுகளுக்குத் தகுதிபெறுவர் என இருக்கும் சட்டத்தை மாற்றி 3 ஆண்டுகளாக்குவதற்கான சட்ட முன்வடிவு, நாடாளுமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கும் பின்னணியில் இதனை 4 ஆண்டுகளாக அதிகரிக்க அரசு முடிவுசெய்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட 1.3 பில்லியன் டொலர்கள் சேமிப்புக்கு மேலதிகமாக 200 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
குறித்த முன்மொழிவு சட்டமாக்கப்படும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் newstart, பராமரிப்பாளர் கொடுப்பனவு, Family Tax Benefit மற்றும் கொடுப்பனவுடனான மகப்பேற்று விடுமுறை மானியங்களைப் பெறுவதற்கு 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
இதன்மூலம் தற்போதைய நிலையில் சுமார் 66 ஆயிரம் புலம்பெயர் குடும்பங்களும் 47 ஆயிரம் தனிநபர்களும் பாதிக்கப்படுவர் என social services அலுவலகம் செனட் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரி மனிதாபிமான விசா வழங்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
