ஓய்வூதியம் பெறும் புலம்பெயர் பின்னணி கொண்ட முதியவர்கள் மற்றும் சென்டர்லிங்க் கொடுப்பனவு பெறும் முன்னாள் வீரர்கள், விதவைகள் உள்ளிட்டோர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பத்தொகையில் வழங்கப்பட்ட சலுகையை ரத்துச் செய்யும் அரசின் தீர்மானம் மீளப்பெறப்படுகிறது.
சாதாரணமாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் சுமார் 285 டொலர்களை அதற்கான விண்ணப்பத்தொகையாக செலுத்தவேண்டியுள்ள நிலையில் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விதவைகள் வெறுமனே 20 அல்லது 40 டொலர்கள் மட்டுமே செலுத்த வேண்டும்.
இந்தநிலையில் குறித்த சலுகையை எதிர்வரும் ஜுலை 1 முதல் நீக்குவதற்கான நாடாளுமன்ற ஆவணங்களை உள்துறை அமைச்சர் Peter Dutton இரு வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி pensioner concession card வைத்திருப்பவர்கள் Newstart, aged pension, disability support pension, parenting payments உள்ளிட்ட கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது அதற்கான முழு கட்டணத்தையும் செலுத்தவேண்டியிருந்திருக்கும்.
எனினும் அரசின் இந்நகர்வானது நியாயமற்றது எனத் தெரிவித்த கிரீன்ஸ் கட்சி, நாடாளுமன்றில் disallowance motion ஊடாக எதிர்கட்சி அங்கத்தவர்களின் ஆதரவுடன் அரசின் தீர்மானத்தை தோற்கடித்துள்ளது.
இதையடுத்து ஜுலை 1 முதல் அமுல்படுத்தப்படவிருந்த மாற்றம் மீளப்பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share
