பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது.
பாலியல் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருதல், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என விக்டோரிய அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலியல் தொழில் தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்ட வரையறைகளானது சுமார் 30 ஆண்டுகள் பழமையானவை எனவும், தற்போதைய சூழலுக்கு அவை பொருத்தமற்றவை எனவும் விக்டோரிய அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய சட்டங்களின் படி விக்டோரியாவில் street-based அடிப்படையிலான பாலியல் தொழில் ஒரு குற்றமாகும். ஆனால் பதிவு செய்யப்பட்ட பாலியல்விடுதிகள் மற்றும் escort agencies அல்லது தனியார் பாலியல் தொழிலாளியாக சேவைகளை வழங்குவது போன்றவை கடுமையான நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளின்கீழ் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் இது மிகவும் குழப்பகரமான மற்றும் கடுமையான நடைமுறை எனவும், ஏனைய பணியாளர்களைப்போலவே பாலியல் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமெனவும், ஆஸ்திரேலிய பாலியல் தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்திவந்த பின்னணியில் அரசு இம்மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.
இந்நிலையில் பாலியல் தொழில் பாதுகாப்பானது என்பதை அரசு கொண்டுவரும் சட்டமாற்றம் உறுதிசெய்யும் என விக்டோரிய நுகர்வோர் விவகார அமைச்சர் Melissa Horne தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு விக்டோரியரும் தனது தொழிலில் பாதுகாப்பாக உணர்வதற்கான உரிமை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாலியல் தொழில் குற்றமல்ல என்ற சட்டமாற்றத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கடந்த 1995ம் ஆண்டு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
