மெல்பேர்ன் பெருநகரின் Truganina எனுமிடத்தில் நடந்த வாகன விபத்தில் இந்தியப் பின்னணி கொண்ட 10 வயதுச் சிறுமியும் அவரது 4 வயது தம்பியும் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த தம்பதியும் அவர்களது இரு பிள்ளைகளும் கடந்த ஞாயிறு நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு சென்றுவிட்டு Ford Focus எனும் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, Truganina- Hopkins வீதியில் மற்றொரு காரை முந்திக்கொண்டு எதிரில் வந்த Ford Territory கார் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் Ford Focus-இல் பயணம் செய்த 10 வயது Ruana அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மீதி மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
எனினும் 4 வயது Immanual George சிகிச்சை பலனின்றி திங்கள் இரவு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிள்ளைகளின் தாய் இன்னமும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அதேநேரம் தந்தை சிறுகாயங்களுக்குள்ளானதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை Ford Territory காரை ஓட்டிச் சென்ற Rockbank பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் மீது விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
