கொரோனா காலப்பகுதியில் ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டு விமானப்போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேற விண்ணப்பித்தவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர், கடந்த மார்ச் 25-க்கும் ஆகஸ்ட் 31-க்கும் இடையில் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.
இந்த தகவலை Australian Border Force (ABF) வெளியிட்டுள்ளது.
ஆனால் ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாதவர்கள் அல்லது ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் உள்ளவர்கள் வெளிநாடுகளிலுள்ள தங்களது குடும்பத்தினருடன் மீள இணைவது கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சாத்தியமில்லாமல் தொடர்ந்து இழுபறிநிலையிலுள்ளது.
தங்களை தமது குடும்பத்துடன் இணைவதற்கு அனுமதிக்குமாறு விசேட தேவைப்பிரிவின் கீழ் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்துவருகிறார்கள். இவ்வாறு விண்ணப்பித்தவர்கள் பலர் துயர்நிறைந்த அனுபவங்களை பெற்றிருக்கிறார்கள்.
பிரிஸ்பனிலுள்ள பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், தனது மனைவியும் 14 மாத குழந்தையும் ஆஸ்திரேலியா வருவதற்கு அனுமதிகோரி முப்பது தடவைகள் விசேட பிரிவின் கீழ் விண்ணப்பித்தும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
நெதர்லாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து தஞ்சமடைந்தவரின் மனைவி, தனது பெற்றோருக்கு குழந்தையை காண்பிப்பதற்காக நெதர்லாந்து சென்றவர் மீண்டும் வரமுடியாமல் அங்கு அகப்பட்டிருக்கிறார். அவரையும் தனது மகனையும் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தபோதும் 13 தடவைகள் இவரது விண்ணப்பங்கள் ஆஸ்திரேலியா தரப்பினால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக Australian Border Force (ABF) தெரிவிக்கையில் - கடந்த ஆறு மாதங்களில் நாற்பதாயிரம் பேர் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 13 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள்தான் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று நாட்டுக்குத் திரும்பிவரும் ஆஸ்திரேலியர்களின் வாராந்த எண்ணிக்கை வரம்பும் அதிகரிக்கப்படுகிறது. விமானநிலையத்தினை மீளத்திறப்பது மற்றும் பயணத்தடைகளை நீக்குவது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்-என்று குறிப்பிட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
