தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று நள்ளிரவு முதல் 6 நாட்களுக்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பரவல் எந்தளவு தீவிரமானது என்பது தெரியாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படுவதாக மாநில Premier Steven Marshall அறிவித்தார்.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் எவரும் வீடுகளைவிட்டு வெளியேற முடியாது. அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிற்கு ஒருவர் ஒருதடவை மாத்திரம் வெளியே செல்லமுடியும்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள், take away கடைகள், Pubs, cafes,food courts மூடப்படுகின்றன.
திருமண நிகழ்வுகள், இறுதிநிகழ்வுகள் நடத்த முடியாது.
Regional பகுதிகளுக்கான பயணம், வெளிப்புற விளையாட்டுகள் தடைசெய்யப்படுகின்றன.
Aged care, disability residential facilities போன்றவற்றுக்கு வெளியிலிருந்து எவரும் செல்லமுடியாதவாறு மூடப்படுகின்றன.
வீடுகளைவிட்டு வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
ஆறு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள இம்முடக்கநிலை முடிவடைந்ததும் மேலும் 8 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஆனால் தற்போது உள்ளதைப்போன்று கடுமையான கட்டுப்பாடுகளாக அவை இருக்காது எனவும் தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸ் ஆணையர் Grant Stevens தெரிவித்தார்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து Parafield என்ற இடத்தில் ஏற்பட்ட பரவல் மூலம் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
