14 பாதுகாப்பு அதிகாரிகளால் உடல்வதை செய்து அடக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் பூர்வகுடி இளைஞனின் மரணத்துக்கு அவரது குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கும்படி தெற்கு ஆஸ்திரேலிய சிறைத்துறையினருக்கு மாநிலத்தின் Ombudsman உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலிய Yatala சிறையில் வைக்கப்பட்டிருந்த பூர்வகுடி இளைஞனான Wayne Fella Morrison என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
Wayne Fella Morrison மரணம் தொடர்பில் பின்வரும் விடயங்கள் கூறப்படுகின்றன:
‘சிறையின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாகனத்தில் முகம் குப்புறக்கிடத்தப்பட்ட நிலையில் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். அவருடன் அதிகாரிகள் வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். வாகனம் சென்று சேரவேண்டிய இடத்தில் குறிப்பிட்ட இளைஞனை இறக்கும்போது அவருக்கு சுயநினைவிருக்கவில்லை. அங்கு செயற்கை சுவாசமளிப்பதற்கு முயற்சிசெய்யப்பட்டிருக்கிறது. பின்னர் சுயநினைவற்ற நிலையில் அடிலெய்ட் வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டார். பல மணிநேரத்துக்கு பின்னர்தான் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாட்களுக்கு பின்னர் அவர் இறந்துவிட்டார்.
வாகனத்தில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது, ஒரு கைதியை இடமாற்றும்போது அந்த செயற்பாடு காணொளியில் பதியப்படவேண்டிய கடமையும் பின்பற்றப்படவில்லை போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள ombudsman இந்த மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
இந்தச்சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பது தகுந்த பரிகாரமாக அமையாது என்றாலும் எதிர்காலத்தில் பொறுப்புக்கூறவேண்டிய தரப்புக்கான கடமைகளை வலியுறுத்துவதற்கு இந்தப்படிமுறை ஒரு உந்துதலாக அமையவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
