தென்கொரிய தலைநகர் சோலில் (Seoul) Halloween கொண்டாட்டத்திற்காக குறுகிய தெருவொன்றில் திரண்ட ஒரு குழுவினர், கூட்டத்தின் நெரிசலில் சிக்குண்டதால் 150 இற்கும் அதிகமானோர், குறிப்பாக இளம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்திகள் பரவலாக செய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
தலைநகரில் Hamilton Hotel அமைந்துள்ள குறுகிய Itaewon வீதியின் மிக க்குறுகிய பகுதியில், ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இளைஞர் யுவதிகள் திரண்டதாகவும் கூட்டத்தின் பின்னாலிருந்தவர்கள் முன்னால் இருந்தவர்களைத் தள்ளியதன் காரணமாக பலர் நிலத்தில் விழுந்ததாகவும் அதன் போது பலர் மிதியுண்டு இறந்ததாகவும் அந்தப்பகுதி போர்களம் போலக் காட்சியளித்ததாகவும் இந்தச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியிருக்கிறார்.

நிலைமை மிகமோசமாக, கட்டுக்கடங்காமல் போனதாக Yongsan பிரிவு தீயணைப்பு நிலைய அதிகாரி Choi Seong Beom கூறியிருக்கிறார். 400 இற்கும் மேற்பட்ட emergency workers -அவசரகால பணியாளர்கள் மற்றும் 140 இற்கும் அதிகமான அம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Covid 19 தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் முதல்முறையாக இவ்வளவு திரளான மக்கள் தலைநகரில் ஒரே இடத்தில் கூடியதாகச் சொல்லப்படுகிறது.
Halloween கொண்டாட்டங்கள் புதிதல்ல என்றபோதும் இப்படியான ஒரு மிகமோசமான விபத்து ஏற்பட்ட பின்னர்தான், பலரும் இந்த Halloween என்பது என்ன, இந்த Halloween இன் பின்னணி என்ன இது ஏன் கொண்டாடப்படுகிறது என்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

இந்துக்கள் ஆடிஅமாவாசை என்று என்று ஒரு தினத்தை விசேட தினமாகக் கருதி வழிபாடுகள் செய்வது பலரும் அறிந்தது. ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன்- பூமி ஆகிய கிரகங்களுடன் நேர்கோட்டில் வரும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாளில் பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பூலோகத்திற்கு வரும் நாளாக இது கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும்விதமாக அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகின்றது. இப்படிச்செய்வதால் நமது முன்னோர்களது ஆசீர்வாதமும் அனுக்கிரகமும் நமக்குக் கிடைக்கும் என்றும் நமக்கு வரும் இடையூறுகள் நீங்கும் என்றும் இந்துக்கள் நம்புகிறார்கள்.இதற்கு நிகரான ஒன்றுதான் Halloween என்பது.
Celtic mythology என்ற அயர்லாந்து மற்றும் ஸகொட்லாந்து பகுதியில் வாழும் மக்களின் புராண கதைகளின்படி, இறந்தோரின் உலகமும் நாம் வாழும் இந்த உலகமும் மிக நெருக்கமாக வரும் நாள் அக்டோபர் 31 ஆந்திகதி என்றும் இறந்த நம் முன்னோரின் ஆவி பூமிக்கு அன்று திரும்பிவருவதாகவும் அவர்களை மகிழ்விக்கவும் அவர்களது ஆசியைப்பெறவும் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை படைத்து உண்டு மிகிழ்வது பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
Ireland மற்றும் Scotland குடிமக்கள் படிப்படியாக பெருமளவில் அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறியதால் முதலில் சிறிய அளவில் அங்கு இடம்பெற்ற கொண்டாட்டங்கள் பின்னர் இதில் இருக்கக்கூடிய commercial opportunities -வணிக வாய்ப்புகள் உணரப்பட்டதன் காரணமாக களைகட்டத்தொடங்கின.

அமெரிக்காவில் Halloween தொடர்பான பொருட்களின் விற்பனை வருடாந்தம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இங்கிலாந்து ஆஸ்திரேலியா, இத்தாலி, தென்கொரியா, சீனா, ஜப்பான், மெக்ஸிக்கோ, கவுதமாலா போன்ற பல நாடுகளிலும் Halloween கொண்டாட்டங்கள் பரவலாக இடம்பெறுகின்றன.
இதைத்தவிரவும் நவம்பர் மாதம் முதலாந்திகதி All saints day என்ற புனிதர்களின் நாள் என்றவகையிலும் Ireland இல் ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த Celts என்ற இனத்தவர்களின் புத்தாண்டு நவம்பர் முதலாந்திகதி என்ற வகையிலும் அதற்கு முன்தினமான அக்டோபர் 31 ஆந்திகதி, இப்போது புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் New Year’s Eve என்று அழைக்கப்படுவதுபோல, hallows eve என்று அழைக்கப்பட்டதாலும் hallows eve என்பது மருவி Halloween என்று மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் Halloween கொண்டாட்டங்களின் போது, ஆவி, பேய், எலும்புக்கூடு, மண்டையோடு, போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதவிதமான costumes ஆடைகளை மற்றும் அணிகலன்களை அணிதல், பூசணிக்காயின் உட்புறத்தைத் தோண்டியெடுத்துவுட்டு அதனுள் விளக்குகளை வைத்து lantern என்ற வகையில் ஒளியேற்றுதல், மாயனங்களுக்கு குழுக்களாகச்செல்லுதல் என்ற அல்லது மயானம் அல்லது பாழடைந்த மண்டபம் போன்று இடங்களை வடிவமைத்து அங்கு ஆடிப்பாடுதல் என்று இன்னோரன்ன நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

சிறுவர் சிறுமிகள் இந்த கொண்டாட்டத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்து அண்டைவீடுகளுக்குச்சென்று அவர்களது கதவுகளைத்தட்டி ‘trick or treat’ என்று கூவுவதும் அவர்கள் தரும் இனிப்புகளைப் பெற்று மகிழ்வதும் பரவலாக இடம்பெறும்.
சமய கலாச்சார மூலங்களைக்கொண்ட கொண்டாட்டங்கள், வணிக வாய்புகளுக்கான சூழல் காரணமாக களியாட்ட பெருவிழாக்களாக மாறுவதும் இதனால் கவரப்பட்ட இளஞ்சமுதாயம் இடம், பொருள், ஏவல் என்பன மறந்து விபத்துக்களில் சிக்கிக்கொள்வதும் சோல் நகரில் இடம்பெற்றுள்ள விபத்து எமக்கு உணர்த்தும் செய்தியாகும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
