தெற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பழம் பிடுங்கும் தொழிலுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு தென் பசுபிக் பிராந்தியத்திலிருந்து சுமார் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் விரைவில் வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக இருநூறு பேர் ஓரிரு நாட்களில் வரவுள்ளனர் என்றும் மிகுதிப்பேர் அடுத்தடுத்த மாதங்களில் வரவுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசாங்கத்தின் commonwealth seasonal worker program and Pacific labour scheme என்ற தொழில் வாய்ப்பு திட்டத்தின் கீழ், வரவுள்ள இவர்கள் அனைவரும் அடிலெய்ட்டிலிருந்து கிழக்காக 270 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள Paringa என்ற இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு பழம் பிடுங்கும் வேலைக்கு அனுப்பப்படவுள்ளார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
கோவிட் காரணமாக ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையினால், தெற்கு ஆஸ்திரேலிய பழத்தோட்டங்களில் பழம் பறிக்கும் பணி மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக அறிவித்த மாநில அரசு, வெற்றிடங்களுக்கு உள்நாட்டில் ஆட்களை கோரியிருந்தது. போதுமானளவு தொழிலாளர்கள் கிடைக்காத பட்சத்தில், வெளிநாட்டுத்தொழிலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
கோவிட் பிரச்சினைக்குப்பிறகு, தென் பசுபிக் நாடுகளிலிருந்து ஏற்கனவே இவ்வாறு வருகைதந்துள்ள சுமார் இரண்டாயிரத்து 600 தொழிலாளர்கள் பழத்தோட்டங்களில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
