மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தல் சட்டநடவடிக்கை காரணமாக மீண்டும் தடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளநிலையில், அதற்கெதிரான மேன்முறையீட்டின்மீதான தீர்ப்பு வழங்கப்படும்வரை அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கலாம் என Federal நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் பத்துமாத குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது bridging visa கடந்த தை - மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததையடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை கடந்தவாரம் அறிவித்த நீதிமன்றம், குறித்த குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்திருந்தது.
இதையடுத்து நடேசலிங்கம்- பிரியா குடும்பம் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கான ஆணையை குடிவரவுத் திணைக்களம் அவர்களிடம் சமரப்பித்திருந்தது. இவ்வாணையின் பிரகாரம் அவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை நாடுகடத்தப்பட்டிருப்பார்கள்.
எனினும் குறித்த தீர்ப்பிற்கெதிரான மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பினை நீதிமன்றம் வழங்க வேண்டியுள்ளதால் அதுவரை இக்குடும்பத்தை நாடுகடத்தக்கூடாதெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த மெல்பேர்ன் Federal நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் உடனடியாக நாடுகடத்தப்படுவதற்கெதிராக இடைக்கால தடையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நடேசலிங்கம் - பிரியா குடும்பம் உடனடியாக நாடுகடத்தப்படாமல் மேன்முறையீட்டு மனுமீதான தீர்ப்பு வழங்கப்படுவதற்கு எத்தனை மாதங்கள் எடுக்கிறதோ அதுவரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கலாம் என்பது சற்றே ஆறுதலிப்பதாக இக்குடும்பத்தின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
