சிட்னியில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கைப் பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய இந்நபர் சிட்னி Kensington பகுதியில் வைத்து நேற்றையதினம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் இன்று Waverley நீதிமன்றில் முன்னிலையான போது இவருக்கு பிணை வழங்க அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரம் இவரது வழக்கு எதிர்வரும் அக்டோபர் 24-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நபர் மாணவர் விசாவில் இங்கு தங்கியிருக்கும் அதேநேரம் UNSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துகொண்டிருந்ததாகவும், சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்நபர் தனியாகவே இயங்கியதாக நம்பப்படுவதாகவும் இதற்கு முன்னர் இவர்மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் கூறியுள்ள பொலிஸார், குற்றம்சாட்டப்பட்டவரின் மாணவர் விசா செப்டம்பர் மாதம் முடிவடையவிருந்ததாகவும், அவர் தொடர்ந்தும் இங்கே தங்கியிருப்பதற்கான நடடிவக்கைகளில் ஈடுபட்டிருந்த அதேநேரம் இவர் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு சென்று திரும்பியதாகவும் கூறியுள்ளனர்.
குறித்த நபருக்கும் IS அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mohamed Nizamdeen என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய notebook ஒன்று பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
