கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்துள்ள இக்காலப்பகுதியில் ஓய்வுறு பருவநிதியை (Superannuation) முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை பயன்படுத்தி இணையவழித்திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டத்தொடங்கியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலப்பகுதியில் வேலையிழந்தோர் மற்றும் நிதிநெருக்கடியை எதிர்கொள்வோர் தங்களது superannuation நிதியில் 20 ஆயிரம் டொலர்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என்று மொறிஸன் அண்மையில் அறிவித்திருந்தமை தெரிந்ததே.
இதன்படி, இதுவரை சுமார் மூன்று லட்சத்து 60 ஆயிரம்பேர் விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளதாக அரச தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தகுதிநிலை அங்கீகரிக்கப்பட்டால் முதல் பத்தாயிரம் டொலர்கள் ஏப்ரல்-ஜூலை காலப்பகுதியிலும் அடுத்த பத்தாயிரம் டொலர்களை ஜூலை 1-க்குப் பின்னரும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாங்கள் இதைவிடவும் முன்னதாக இந்த நிதியை பெற்றுத்தருவோம் என்று தொலைபேசி மற்றும் இணையங்கள் வழியாக அநாமதேய அழைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த அநாமதேய பேர்வழிகள் வங்கிக்கணக்கு உட்பட தனிப்பட்ட விவரங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் இணையப்பாதுகாப்பு பிரிவில் இதுவரை 90 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சிக்கலான காலப்பகுதியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பலவீனமானவர்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கும் இந்தக்கும்பல்களிடம் அவதானமாக இருக்கும்படி அரசு அறிவித்துள்ளது.
