நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்குப் பின் முதல்தடவையாக கோவிட்-19 சமூகத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிட்னி விமானநிலையத்தில் பணிபுரியும் 45 வயது நபரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சிட்னி விமானநிலையத்தை வந்தடையும் விமானப்பணியாளர்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்வதற்கு உதவும் பணியில் இவர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு கடந்த சனிக்கிழமை முதல் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்ததாகவும், செவ்வாய்க்கிழமை கோவிட் சோதனை மேற்கொள்வதற்கிடையில் அவர் பணிக்கு சமூகமளித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
எனினும் இவர் பொதுமக்கள் போக்குவரத்தில் உதவுவதற்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் இவருடன் தொடர்பில் இருந்தவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதவிர இன்றையதினம் இன்னும் இருவருக்கு சமூகப்பரவல் ஊடாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
