இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு ஒன்றரை வருட சிறைவாசத்துக்குப் பின்னர் கடந்த ஜனவரி முதலாம் திகதி விடுதலை செய்யப்பட்ட நபர், தலையை வெட்டுவது மற்றும் சித்திரவதை செய்வது போன்ற காணொளிகளையும் இச்செயற்பாடுகளை ஆதரிக்கும் ஆவணங்களையும் இணையத்தில் தேடிப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிட்னியை சேர்ந்த இந்த 25 வயது நபரை பொலீஸார் நேற்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
முன்னர் கைதுசெய்யப்பட்டபோது தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட இந்த நபர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடாது என்பது உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற நிபந்தனைகளை மீறினார் என்பது உட்பட மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு தற்போது முகங்கொடுத்திருக்கும் இந்த நபர், குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டால் அதிகபட்சம் ஐந்துவருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
