சிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் வீட்டின் விலைகள் அதிகரிப்பது, முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி என்றாலும், முதல் முறையாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல செய்தி அல்ல என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கவனிக்கத்தக்க சில விடயங்கள்:
கடந்த ஆண்டு இதே வேளை விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இப்பொழுது விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கை சுமார் 33 சதவீதம் குறைந்துள்ளது.
ஆனால் வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்த royal commission விசாரணையின் பின்னர், கடன் வழங்குவதற்கான கெடுபிடிகள் சில தளர்த்தப்பட்டுள்ளதால், வீடு வாங்குவோர் பலர் நம்பிக்கையுடன் முன் வருகிறார்கள்.
சிட்னி நகரில் ஏலத்தில் விற்கப்பட்ட ஒரு வீட்டை வாங்குவதற்கு பலர் ஆர்வம் காட்டியதால், அந்த ஏலம் நடக்க வேண்டிய நாளுக்கு 10 நாட்களுக்கு முன்னரே ஏலம் நடத்தப்பட்டது.
நேற்று முன் தினம் வெளியான CoreLogicகின் தரவுகளின்படி (மாதாந்தர வீட்டு மதிப்புக் குறியீடு) சிட்னியில் வசிக்கும் வீடுகளின் விலை 1.6 சதவீதம் உயர்ந்துள்ளது என்று காட்டுகிறது. இது ஆஸ்திரேலிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஆஸ்திரேலிய மத்திய வங்கி (RBA) மிகக் குறைந்த வட்டி வீதத்தை தொடர்ந்து கொண்டிருப்பதும் இதற்கு இன்னொரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
நாடளாவிய வகையில், வீட்டின் மதிப்புகள் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 0.2 சத வீத வீழ்ச்சியைக் கண்டுள்ளன. இருந்தாலும், NSW மற்றும் விக்டோரிய மாநிலங்கள் காணும் வளர்ச்சியால் அந்த வீழ்ச்சி கட்டுக்குள் இருக்கிறது.
ஹோபார்ட் நகர வீட்டின் விலைகள் 0.2 சதவீத உயர்வை ஜூன் மாதத்தில் கண்டன, அதே போல் தெற்கு ஆஸ்திரேலிய பிராந்திய வீடுகள் 0.1 சதவீத உயர்வையும் வட பிராந்திய வீடுகளின் விலைகளில் 0.2 சதவீத உயர்வையும் கண்டன.
ஆனால், கான்பெரா மற்றும் டார்வின் நகரங்களில் வீட்டு விலைகள் ஜூன் மாதத்தில் 0.9 சதவீதம் சரிந்தன. பேர்த் நகரில், வீட்டு விலைகள் 0.7 சதவீதம் குறைந்துள்ளன.
RBA 2011 ஆம் ஆண்டு வட்டி வீதங்களைக் குறைக்க ஆரம்பித்த போது வீட்டு விலைகள் அதிகரிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
