சிரியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்களின் விளைவாக ஆஸ்திரேலியாவில் அடுத்துவரும் வாரங்களுக்கு பெற்றோல் விலை அதிகரிக்கலாம் என ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull–ஐ மேற்கோள்காட்டி The Australian செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்கனவே ஆட்டம் கண்டுள்ள எண்ணை இறக்குமதி, தற்போது சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலவரத்தின் விளைவாக, பொருளாதாரத்தில் மேலதிக தாக்கங்களை உண்டு பண்ணலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
இது விடயம் தொடர்பாக ஓய்வுபெற்ற Air vice-marshal John Blackburn கூறுகையில் - மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணையின் மீது பெருமளவில் தங்கியிருக்கும் நாடு ஆஸ்திரேலியா. ஆக, அந்த பிராந்தியத்தில் ஏதாவது பதற்றம் ஏற்பட்டால் எண்ணை இறக்குமதியால் முற்றுமுழுதாக பாதிப்படையும் நிலையிலேயே ஆஸ்திரேலியாவின் தேசிய எண்ணை இருப்பு நிலவரம் காணப்படுகிறது. அவசரநிலை ஒன்று ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கக்கூடிய வகையில், ஆஸ்திரேலியாவிடம் வேறு எண்ணை இருப்புக்கள் எதுவும் இல்லை - என்று தெரிவித்துள்ளார்.
எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச அமைப்பு International Energy Agency (IEA), கடந்த பெப்ரவரி மாதம் விடுத்துள்ள அறிக்கையில் - அவசரகால நிலையொன்றில் ஆஸ்திரேலியா முற்றுமுழுதாக எண்ணையை இறக்குமதி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டால், 43 நாட்களுக்கு மாத்திரமே நாட்டு மக்களின் எண்ணை தேவையை நிறைவேற்றக்கூடிய நிலையில் உள்ளது என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
