ஆஸ்திரேலிய குழந்தைகளில் இலத்திரனியல் உபகரணங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்கு மொறிஸன் அரசு மூன்றரை கோடி டொலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய குழந்தைகள் தங்களது முதல் எட்டு வயதான காலப்பகுதிவரை பயன்படுத்துகின்ற இலத்திரனியல் உபகரணங்களினால் அவர்கள் மீது ஏற்படுகின்ற தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து இந்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத்துறை பீடத்தில் அமைக்கப்படவுள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் மேற்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது.
இலத்திரனியல் உபகரணங்களின் ஆக்கிரமிப்பிற்குள் முழுமையாக ஈர்க்கப்பட்டுள்ள இன்றைய இளம்தலைமுறையினர் குறித்த கரிசனையின் பொருட்டு உலகளாவிய ரீதியில் இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், குயின்ஸ்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிப்பணிகளில் குழந்தைகளின் டிஜிட்டல் பாதுகாப்பு, அவர்களது சமூகவலைத்தள பாவனை, இலத்திரனியல் உபகரங்களில் அவர்கள் செலவிடும் நேரம் மற்றும் அதன் விளைவாக அவர்களில் ஏற்படுகின்ற சுகாதார விளைவுகள் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெற்றோருக்கும் பயனுள்ள பரிந்துரைகளை வழங்கவல்லது என்பது மாத்திரமல்லாமல் ஆரோக்கியமான தலைமுறையின் வளர்ச்சிக்குரிய திட்டமிடல்களுக்கும் உதவிசெய்யக்கூடியது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
