மெல்பன் பெரு நகரின் Campbellfield எனுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வேதியல் தீ விபத்தில் இலங்கைத் தமிழர் விக்னேஷ் வரதராஜா என்பவர் சிக்கி படுகாயமடைந்த நிலையில் Alfred மருத்துவமனையில் தீகாயங்கள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் இருந்துவருவதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் கூறுகின்றன.
இரசாயன பொருள் அடைத்து வைத்திருந்த கொள்கலன் அவரது முகம் உள்ளிட்ட பகுதிகள் மீது வெடித்துச்சிதறியதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலை தீயை அணைக்க சுமார் 30 தீயணைப்புப் படை வீரர்கள் நேற்றுவரை போராடினர்.
தீ விபத்தில் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வரதராஜா அவர்கள் இலங்கையிலிருந்து 2013 ஆம் ஆண்டு புகலிடம் கோரி வந்தவர் என்றும், அவர் bridging visaவில் இருக்கின்றவர் என்றும் அவருக்கு தேவையான சிகிச்சை வழங்க Migrants Workers Centre நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது என்றும் இதுவரை $20,000 டாலர்கள் சேர்ந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்பதே விபத்திற்கு காரணமா என்ற கேள்வி எழுவதாக Australian Workers Union - தொழிற் சங்கத்தின் Dave Swan கூறினார்.
