நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐம்பது பேர் படுகொலை செய்யப்பட்டதைத்தொடர்ந்து நாட்டில் துப்பாக்கி தடைச்சட்டத்தை கொண்டுவரப்போவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்ததற்கிணங்க, நாடாளுமன்றத்தில் 119-1 என்ற பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தப்புதிய சட்டதின் பிரகாரம் பல வகைகளிலான துப்பாக்கிகளுக்கான தடை கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றுக்குரிய ரவைகளை பகிர்வதும்கூட தடைசெய்யப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அவற்றை எதிர்வரும் செப்ரெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளிவரப்போவதாக முன்கூட்டியே ஒரளவுக்கு தெரிந்துகொண்ட 300 பேர் இதுவரை தங்களது துப்பாக்கிகளை மீளக்கையளித்துள்ளனர். அல்லது மீளளித்து அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்ற காலக்கெடுவுக்கு பின்னரும் குறிப்பிட்ட ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்குவதற்கு சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தினால் ஏகபோகமாக ஆதரவளிக்கப்பட்டுள்ள இந்தப்புதிய துப்பாக்கி தடைச்சட்டத்துக்கு நாட்டின் ஆளுனர் நாயகத்தித்திடமிருந்து ஒப்புதல் பெற்றதையடுத்து நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
