சட்ட ரீதியாக திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு(de facto parents) பிறந்த குழந்தைகளின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில், பெற்றோரின் பெயரை பதிவு செய்வதில் விக்டோரிய பிறப்பு இறப்பு மற்றும் திருமண பதிவாளர் திணைக்களம் புதிய ஏற்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைகளின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் பெற்றோரின் உறவு கோரப்பட்ட இடத்தில் இவ்வளவு காலமும் 'Marriage', 'Registered overseas', 'Not any' ஆகிய தெரிவுகள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன.
இந்த தெரிவு அறம் சார்ந்தது அல்ல என்று முன்வைக்கப்பட்ட கருத்தினை ஏற்றுக்கொண்ட விக்டோரிய பதிவாளர்கள் திணைக்களம் திருமண உறவின்றி பிறந்த குழந்தைகளுக்கான பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் சிறப்பு ஏற்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஏற்பாட்டின் பிரகாரம் குறிப்பிட்ட குழந்தைகளின் பெற்றோரின் உறவு Domestic Relationship என்று பதிவு செய்யப்படும் என்றும் இந்த பெயரின் கீழ் பதிவு செய்யப்படும் பெற்றோர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பது சட்ட ரீதியான கடப்பாடு என்றும் பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை காலமும் இந்த ஏற்பாடு பதிவு செய்யப்படாமல் தங்களது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை வைத்திருப்பவர்கள் 30 டொலர்கள் செலுத்தி இந்தப்புதிய பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
