திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பால்மாற்று சத்திரசிகிச்சையை செய்யாமல் தமது விருப்பத்துக்கு ஏற்றபடி தங்களது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதியளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவாதம் விக்டோரிய நாடாளுமன்றில் இடம்பெறுகிறது.
தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தங்களை எதிர்பாலாராக பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் உத்தியோகபூர்வமாக ஆவணப்படுத்துவதற்கு அவர்கள், தங்களது பாலினத்தை மாற்றுவதற்கு உரிய சத்திரசிகிச்சையை மேற்கொண்டிருக்கவேண்டும்.
ஆனால், அந்த சிகிச்சை முறை ஆஸ்திரேலியாவில் பொதுவாக செய்யப்படுவதில்லை என்பதற்கு அப்பால் மிகுந்த செலவு மிகுந்ததும் ஆகும்.
ஆகவே, அந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ளவேண்டும் என்று அரச சட்டம் ஒன்று வலியுறுத்துவது, தனிமனித உரிமையில் - நியாயமின்றி - அத்துமீறுவதாகும் என்று பால்சமத்துவ உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பிரகாரம், விக்டோரிய நாடாளுமன்றில் முன்வைக்கப்படுகின்ற சட்ட சீர்திருத்தத்தின்படி, விக்டோரியாவில் 12 மாதங்கள் வாழ்ந்த ஒருவர் தான் விரும்பியபடி தனது பாலினத்தை தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் மாற்றமுடியும்.
இந்த சட்டச்சீர்திருத்தம் 2016 ஆம் ஆண்டு லேபர் கட்சியினால் நாடாளுமன்றிற்கு கொண்டுவரப்பட்டபோதும், லிபரல்களினால் தோற்கடிக்கப்பட்டது.
இச்சட்டம் தஸ்மேனியாவில் இந்த வருட ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏனைய மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
