தமிழக முதலமைச்சர் பதவிக்கு இலக்குவைத்து காய்களை நகர்த்திவந்ததாக கூறப்பட்ட அன்புமணி ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியென்ற தமிழகத்தின் மிகப்பெரிய சாதிக்கட்சி நடந்து முடிந்த தேர்தலில் அடியோடு தகர்த்தெறியப்பட்டிருக்கிறது.
கூட்டணி அமைக்கும்போது கேட்டு வாங்கிய தொகுதிகளில் எவற்றிலும் வெற்றிபெறாதது மட்டுமல்லாமல் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக நம்பிய அன்புமணியே தேர்தலில் மண்கவ்வியிருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெரும் கோட்டை என்று கருதப்பட்ட தர்மபுரியில் வன்னியர் குல மக்களின் வாக்குகளை மையப்படுத்தி இம்முறை தேர்தலில் குதித்த அன்புமணி ராமதாஸிற்காக பெரும் பெரும் கூட்டணி கட்சி பிரபலங்களே வந்து பிரச்சாரங்கள் செய்தன. ஆனால், பா.ம.கவின் நகர்விற்கு எதிர் வியூகத்தை அமைத்த தி.மு.க. அதே வன்னியர் குலத்தை சேர்ந்த செந்தில்குமாரை களமிறக்கி பிரச்சாரங்களை முடுக்கிவிட்டது.
நேற்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையிலிருந்தாலும் இறுதியில் படுதோல்வியடைந்தார்.தங்களது பாரம்பரிய ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்களாலேயே கைவிடப்பட்டார்.
இதேவேளை, ஏனைய தொகுதிகளிலும் பா.ம.க. மற்றைய கட்சிகளிடம் அடி வாங்கியிருக்கிறது. விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க.வின் வடிவேல் ராவணனை விடுதலை சிறுத்தைகள் டாக்டர் ரவிக்குமார் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு ஆயிரக்கணக்கான வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்.
சாதி ரீதியாக மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து தொடர்ந்து தனது அரசியலை நடத்தி வந்த பா.ம.கவுக்கு இந்த தேர்தலில் விழுந்துள்ள அடி, தமிழகத்தில் சாதிக்கட்சிகளுக்கு விழத்தொடங்கியுள்ள பெரும் அடியாக கருதப்படுகிறது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
